×

திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தலில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் நாடாளுமன்ற தேர்தலில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பெருமாள்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் ஆய்வு மேற்கொண்டார். திருவள்ளூர் நாடாளுமன்ற (தனி) தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த 19ம் தேதி நடைபெற்றது. வாக்குப் பதிவுக்கு பின் சரிபார்க்கப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்களை பெட்டியில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து வாக்குச்சாவடி மையங்களில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான திருவள்ளூர் அடுத்த பெருமாள்பட்டில் உள்ள தனியார் பள்ளிக்கு கொண்டு வரப்பட்டன. பிறகு வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது.

மேலும் வாக்கு எண்ணிக்கை மையத்தினை ஜூன் 4ம் தேதி வரை ஒரு வேளைக்கு 8 மணி நேரம் அடிப்படையில் 39 மத்திய எல்லை பிரிவில் 1 இன்ஸ்பெக்டர், 38 காவலர்களும், காவல்துறையில் 1 உதவி ஆணையர், 3 இன்ஸ்பெக்டர், 9 சப்-இன்ஸ்பெக்டர், 24 காவலர்களும், 40 தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரும், 2 வெடிகுண்டு கண்டுபிடித்தல் மற்றும் செயலிழக்க பிரிவு போன்ற 4 அடுக்கு காவல் படையினர் கொண்டு வாக்குச்சாவடி மையத்தினை கண்காணித்து வருகின்றனர்.

இதேபோல் 3 வேளைகளிலும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், 228 கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்குச்சாவடி மையத்தில் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து வாக்குச்சாவடி மையத்தினை 24 மணிநேரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த வாக்கு எண்ணிக்கை மையத்தினை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் வேட்பாளர்களின் முகவர்களும் நியமிக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் வாக்கு எண்ணும் மையத்தினை பார்வையிட்டார். வைக்கப்பட்டிருந்த சீல்கள் சரியாக இருக்கின்றனவா என்றும், கட்டுப்பட்டு மையத்தில் அனைத்து கேமராக்களும் சரியாக இயங்குகின்றதா எனவும் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது ஆவடி காவல் துணை ஆணையர் ஐமன் ஜமால், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சத்திய பிரசாத், தேர்தல் வட்டாட்சிய சோமசுந்தரம் மற்றும் காவல் துறை அதிகாரிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.

The post திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தலில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Separate ,Thiruvallur ,District Collector ,T. Prabhu Shankar ,Perumalpat ,Tiruvallur Parliamentary ,Tiruvallur (Separate) ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கான...